அழைப்பின் பேரில் சேவையாற்ற வருகின்ற மருத்துவர்களுக்கான புதிய அலவன்ஸ் தொகை விகிதம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெஃப்லி அகமது நேற்று தெரிவித்து இருப்பதை மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வரவேற்றுள்ளார்.
இந்த அலவன்ஸ் தொகை விகிதம் ஆகக்கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அத்தொகை மறு ஆய்வு செய்யப்படுவதற்கு ஏதுவாக இவ்விவகாரத்தை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அதனை மதிப்பீடு செய்து புதிய அவலவன்ஸ் தொகை நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர். சுல்கெஃப்லி அஹ்மத் அறிவித்து இருப்பது மருத்துவர்களுக்கு ஓர் இனிய செய்தியாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வர்ணித்தார்.
இந்த அலவன்ஸ் விகிதம் சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்கள் மத்தியில் ஒரு நீண்ட காலப் பிரச்னையாக இருந்து வந்தது. அதனை அமைச்சரவையின் கவனத்திற்கு துரிதமாக கொண்டு செல்லப்பட்ட தீர்வு கண்டுள்ள அமைச்சர் சுல்கெஃப்லி நடவடிக்கை பாராட்டக்கூடியதாகும்.
நோயாளிகளின் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வருவதைப் போல அவர்களுக்கு சேவையாற்றி வரும் மருத்துவர்களின் நலன் மீதும் அதிக அக்கறை கொண்டுள்ள சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி செயல்பாடு, போற்றத் தக்கதாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.