புத்ராஜெயா, மார்ச் 23.
கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியிருப்பதால் மக்கள் தங்களின் வெளிபுற நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.
வெயிலின் வெப்ப நிலைத் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.
இந்த கால மாற்றத்தை உணர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ரட்சி அபு ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்களில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் தவிர்க்க வேண்டும்.
மக்கள் அதிக நீர் பருகுவது மூலம் உடலில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகுவதை குறைத்துக்கொள்ள முடியும் என்று டாக்டர் முஹம்மது ரட்சி கேட்டுக்கொண்டுள்ளார்.