அமைச்சரவை மாற்றத்தில் வி. சிவகுமார் மனித வள அமைச்சர் பதவியிலிருந்த நீக்கப்பட்டதற்கு அவரின் செயல்திறன் குறைபாடு மற்றும் அரசியல் ரீதியில் எழுந்த புகார்களே முக்கிய காரணமாகும் என்று டிஏபி வட்டாரம் தெரிவித்தது.
தாம் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் முந்தைய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சின் திறமையற்ற அதிகாரிகளை நீக்குவதற்கு சிவகுமார் தவறிவிட்டார். இது அவரின் நற்பெயரை பாதித்தது. அதேவேளையில் மனித வள அமைச்சர் என்ற முறையில் அவரின் செயல்திறனில் எழுந்த குறைபாடுகள் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் புகார் அளிக்கத் தொடங்கி விட்டனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத டிஏபி யின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சிவகுமார் பெயர் இல்லை. அமைச்சர் பதவிக்கு கட்சி தயாரித்த சுருக்கப் பெயர் பட்டியலிலும் சிவகுமார் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், அமைச்சரவை பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது பத்து காஜா எம்.பி.யான சிவகுமார் பெயர் இடம் பெற்ற போது டிஏபி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலை ஏற்பட்டது.
இதன் காரணமாகவே பிரதமர் அன்வார், முதல் முறையாக தமது அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவித்த போது சிவகுமாரின் பெயர் விடுபட்டு இருந்தது. பின்னர் அவர் பெயர் இணைக்கப்பட்டது.
காரணம், முழு அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தற்போது மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டிஏபி யின் புக்கிட் மெர்தாஜம் எம்.பி. ஸ்டீவன் சிம் ஆவார் என்று சிவகுமார் நீக்கப்பட்டதற்கு புதைந்து கிடந்த ரகசியத்தை டிஏபி யின் அந்த முக்கிய தலைவர் வெளியிட்டார்.