ஈப்போவில் பள்ளி மாணவனை காரில் மோதி தள்ளி, உயிர் இழப்புக்கு காரணமான போலீஸ் அதிகாரி கைது செய்யப்ப்டடார். 17 வயது மாணவனை மோதி தள்ளியப் பின்னர் அங்கிருந்து காரில் தப்பிய கெடா போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த அந்த போலீஸ் அதிகாரி, தாமான் ஜத்தி யில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சாலைத்தடுப்பு சோதனையில் சிக்கினார் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வில் அமர்ந்துள்ள சஹரிஃப் அஃப்ஃபென்டி சம்ரி என்ற அந்த மாணவன், நேற்று மதியம் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, புரோடுவா அதிவா காரில் பயணித்த போலீஸ் அதிகாரி, அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளையை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
44 வயதுடைய அந்த போலீஸ்காரர் அவ்விடத்திலிருந்து தப்பிவிட்டதைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நெஞ்சிலும், வயிற்றிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டான்.
குற்றம் இழைத்தவர்கள் போலீஸ் படையைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யாரையும் தாங்கள் தற்காக்கப் போவதில்லை என்று யஹாயா ஹாசன் உறுதி கூறினார்.