கோலாலம்பூர், ஜன 29,
துன் மகாதீர் முகமது நாட்டின் பிரதமராக இருந்த போது அவரின் வலது கரமாக விளங்கியவரும், அவரின் நெருங்கிய நண்பருமான முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன், லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தனக்கு சொந்தமான கோடிக்கணக்கான வெள்ளி மதிப்பள்ள சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதாக இரண்டு வெவ்வேறு தவணைகளில் நாட்டின் கரூவூலமான நிதி அமைச்சுக்கு தலைமையேற்று இருந்த 86 வயதான டைம் ஜைனுதீன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
உடல் மெலிந்த நிலையில், கண் பார்வையில் குறைபாட்டுடன் ஒரு நோயாளியைப் போல சக்கர நாற்காலி வண்டியில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடீஸ்வரரான டைம் ஜைனுதீன், தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
தனக்கு சொந்தமான 38 நிறுவனங்கள், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் , பகாங், கெடா மற்றும் கோலாலம்பூரில் உள்ள 19 நிலங்கள் மற்றும் இதர 6 வகையான சொத்துக்கள் ஆகியவற்றை அறிவிக்கத் தவறியதாக 2009 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் தடுப்பு சட்டமான எஸ்.பி.ஆர்.எம்- மின் துணை விதியின் கீழ் டைம் ஜைனுதீன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான Amanah Saham Nasional மற்றும் Amanah Saham Berhad ஆகியவற்றில் உள்ள தனக்கு சொந்தமான பெருவாரியான பங்கு முதலீடுகள் மற்றும் 7 சொகுசு கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் டைம் ஜைனுதீன் அரசாங்கத்திடம் மறைத்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் வெள்ளிக்கும் கூடுதலாக விதிக்கக்கூடிய லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் துன் டாயிம் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இன்று நீதிமன்றத்திற்கு தனது மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலித் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் துன் டாயிம் ஜையினுடீன் வந்திருந்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் ஐந்தாவது பிரதமராக வருவதற்கு அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில் அவரின் அரசியல் வாழ்வை துன் மகாதீருடன் இணைந்து அஸ்தமனமாக்கிய முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவர் டைம் ஜைனுதீன் என்று அன்வார் கைது செய்யப்பட்ட 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி அரசியல் வட்டாரங்களில் மிக பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.