பிரிட்டனைச் சேர்ந்த யூடியூபரிடம் போக்குவரத்துத் துறை போலீசார் 100 வெள்ளி கையூட்டு பெற்ற விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரிக்கும்.
குறிப்பிட்ட அந்த யூடியூபர் தம்பதியர் மலேசியாவில் இருந்து வெளியேறி விட்டதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட். யுஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.
இந்த வழக்கு இன்னும் புக்கிட் அமானின் விசாரணையில் இருக்கின்ற நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக புக்கிட் அமானின் ஆணைக்குக் காத்திருப்பதாக டத்தோஸ்ரீ முகமட். யுஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.
முன்னதாக, ‘THREAD the globe’ யூடியூப் காணொலியில், பிரிட்டனைச் சேர்ந்த ‘UK Van Lifers’ எனும் யூடியூப்வாசிகளிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் கையூட்டு பெறும் வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் அவர்கள் சாலை வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தைச் செலுத்தியக் குற்றத்திற்காக 100 வெள்ளி கையூட்டை போலீஸ் அதிகாரி ஒருவருக்குக் கொடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
அந்த வெளிநாட்டுவாசிகள், 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அபராதம் யாதும் விதிக்கப்படாமல் சம்பவ இடத்திலேயே உடனடியாக ரொக்கம் 100 வெள்ளி கொடுக்க அந்த வெளிநாட்டுவாசிகள் ஒப்புக்கொண்டுள்ளதும் வீடியோவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.