கோத்தா கினபாலு, ஏப்ரல் 19-
மறைந்த பெர்சாத்து ரக்யாத் சபா- PBRS கட்சியின் தோற்றுநரும் சபாவின் முன்னாள் துணை முதலமைச்சருமான டான்ஸ்ரீ ஜோசப் குருப்பின் நல்லுடல் கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு மணி 11.20 அளவில் கோத்தா கினபாலுவை வந்தடைந்தது.
இன்று மதியம் மணி 2 தொடங்கி இரவுமணி 8 வரையில், முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் ஜோசப் குருப்பின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தவுள்ளனர்.
79 வயதான அவர், நேற்று முன்தினம் தேசிய இருதய கழகத்தில் சிகிச்சைப் பலனின்றி காலமாகிய நிலையில் நேற்று காலையில் அவரது நல்லுடல் கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலுவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயினும், இந்தோனேசியா, வட சுலவேசியிலுள்ள ருவாங் எரிமலை வெடிப்பு காரணமாக, இறுதி நேரத்தில் விமானப் பயணங்கள் ரத்து ஆனதால், நேற்று அவரது நல்லுடல் கோத்தா கினபாலுவுக்கு அனுப்ப முடியாமல் போனது.