கோலாலம்பூர், மே 15-
நாட்டில் அனைத்து வாகனங்களிலும் டெஸ்கேம் எனப்படும் டெஸ் போர்ட் கேமரா பொருத்திக்கொள்ளப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்காது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வாகனத்தின் முன் காட்சிகளை பதிவு செய்வதற்கும் வகை செய்யும் டெஸ் போர்ட் கேமரா குறித்து நிறைய பரிந்துரைகளை போக்குவரத்து அமைச்சு பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.
குறிப்பாக ஒவ்வொரு காரிலும் டெஸ் போர்ட் கேமரா பொருத்திக்கொள்வதற்கு ஏற்படக்கூடிய செலவுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
அதேவேளையில் புதியதாக வாங்கக்கூடிய வாகனங்களில் டெஸ் போர்ட் கேமரா பொருத்திக் கொள்ளும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சு ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று புத்ராஜெயா போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த ஊடகவியல் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.