இந்தியா, மே 20-
தமிழ் திரையுலகை பொருத்தவரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரமாகவும் நல்ல பல வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்த ஒரு மிகச் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி என்றால் அது என்றும் மிகையல்ல.
ஏற்கனவே பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் “ட்ரெயின்” என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், மகாராஜா என்ற பட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்பொழுது நடிக்க உள்ளார்.
நடிகை ருக்மணி வசந்த், முன்னணி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். விஜய் சேதுபதியின் 51வது திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு “ACE” என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.