இந்நாட்டில் செயல்படும் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகளின் தோற்றமும், செயல்பாடும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்தி இருக்கும் அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி, இரண்டு மலாய் அமைப்புகள் செய்து கொண்ட விண்ணப்பத்தை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Mary Lim, இந்த விண்ணப்பத்தை செய்துள்ள Mappim எனப்படும் இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றமும், Gapena எனப்படும் மலாய் எழுத்தாளர்கள் சங்கங்களின் சம்மேளனமும் 1964 ஆம் ஆண்டு நீதித்துறை சட்டத்தின் வரையறையை நிறைவு செய்ய தவறிவிட்டன என்று தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் அரசிலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ள அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் ரத்து செய்யப்பட வேண்டும்,/ அந்த தீர்ப்பை எதிர்த்து எதற்காக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்பதற்கு மனநிறைவு அளிக்கும் நியாயமான காரணங்களை முன்வைப்பதில் அந்த இரண்டு மலாய் அமைப்புகளும் தோல்விக் கண்டுள்ளன என்று நீதிபதி Mary Lim சுட்டிக்காட்டினார்.
அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோருவதில் அந்த இரண்டு மலாய் அமைப்புகள் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து நாட்டில் தமிழ், சீனப்பள்ளிகள் 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்திற்கு முரணானவை என்றும், சட்டவிரோதமானவை என்றும், அறிவிக்கக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த மலாய் அமைப்புகள் நடத்தி வந்த சட்டப் போராட்டம், கூட்டரசு நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.