புத்ரா ஜெயா, மார்ச் 1 –
ஐந்து ஆண்டுகுளுக்கு முன்பு தனது வீட்டில் பணிபுரிந்த 23 வயதுடைய இந்தோனேசியப் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக 13 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்ட பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், டி.ஏ.பி முன்னாள் உறுப்பினரும், முன்னாள் தரோனோ சட்டமன்ற உறுப்பினருமான பவுல் யோங் , தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டில் இன்று தோல்விக் கண்டார்.
எனினும் பவுல் யோங் கிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத் தண்டனையை 8 ஆண்டுகளாக குறைப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹட்ஹாரியா சியட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
53 வயதான அந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், குற்றவாளி என்று உறுதி செய்து, அவருக்கு சிறைத்தண்டனையும், பிரம்படித் தண்டனையும் விதித்த ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி, தனது தீர்ப்பில் எந்த தவற்றையும் புரியவில்லை என்று ஹட்ஹாரியா சியட் குறிப்பிட்டார்.
பவுல் யோங் கின் மேல்முறையீடு, மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினரால் 2 க்கு 1 என்ற பெரும்பான்மையில் நிராகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதேவேளையில் அப்பீல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதன் தீர்ப்பின் முடிவு தெரியும் வரையில் தமக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி, பவுல் யோங் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதிப்பதாக ஹட்ஹாரியா சியட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.