தர்பூசணி பழத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர் ஒருவர் ஆழமான வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 36 வயது மியன்மார் பிரஜையான அந்த நபரின் உடல். கடந்த ஞாயிற்றுக்கிழமை கெடா, குவால கெட்டில்,பின்ஞுல்,பத்து 7 இல் தர்பூசணி பழத்தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த அந்நிய ஆடவர் தங்கியிருந்த கொங்சி வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குப்பைக் கொட்டும் குழியில் உடல் கிடந்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
இந்த கொலை தொடர்பில் காலை 7.50 மணியளவில் பழத்தோட்டத்தின் நிர்வாகி ஓர் அவசர அழைப்பை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சக பணியாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சண்டையில் அந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இக்கொலை சம்பவத்திற்கு பின்னர் அந்த கொங்சி வீட்டில் தங்கியிருந்த இதர தொழிலாளர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வெட்டும், உடலில் நான்கு செண்டிமீட்டர் ஆழத்தில் பாய்ந்து இருப்பதாக ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.