தற்கொலை முயற்சிகள் உட்பட மனநல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு தண்டனையை வழங்காமல் அதில் பாதிப்படைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றது.
கடந்த ஆண்டு தற்கொலை முயற்சிக்கான தண்டனை குற்றவியல் சட்டம் 309 பிரிவின் கீழ் நீக்கம் செய்யப்பட்டதுடன் அரசாங்கம் அத்தகைய சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிகிச்சையும் வாழ்க்கையை மாற்றியமைக்க வழிவகுத்துள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்தார்.
தற்கொலை முயற்சியில் கைது செய்யப்படுபவர்கள் இனிமேல் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு வரவழைக்கப்படுவர் என பயப்பட தேவையில்லை என்று அசாலினா ஓத்மான் கூறினார்.
இத்தகைய செயல்பாடு மடானி அரசாங்கம் தண்டனைக்குரிய அணுகுமுறையிலிருந்து மறுவாழ்வு அணுகுமுறைக்கு பாதிக்கப்பட்டவரை மாற்றியமைக்க செயல்படுவதாக அமைகிறது என்று அசாலினா ஓத்மான் விவரித்தார்.