பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது தாயாரை பிணைப்பிடித்து, வீட்டை தகர்த்தப் போவதாக மிரட்டிய 40 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.57 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வீட்டிற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்புப்படையினர் சுமார் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த நபர் தனது தாயாரை விடுவித்தார்.
அதற்கு முன்னதாக, அந்த மூதாட்டியை மீட்பதற்கு அனைத்து வகையான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாரும், தீயணைப்புப் படையினரும் தயாராக இருந்தனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் 65 வயதுடைய தனது தாயாரை அந்நபர் விடுவித்த போதிலும் அந்த மூதாட்டி காயங்களுக்கு ஆளாகியிருந்தார்.
அந்த மூதாட்டியை தனது முரட்டுப்பிடியில் வைத்திருந்த போது அந்நபர் காயப்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, எரிவாயு களனிலிருந்து வாயுவை வெளியேற்றப் போவதாக அந்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.
தனது தாயாரை விடுவித்த அடுத்த கணமே அந்நபரை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
இந்த பிணைநாடகப் போராட்டம் இன்று அதிகாலை 2.46 மணியளவில் முடிவடைந்தது.