காப்பார், மார்ச் 22.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி காப்பாரில், ஜாலான் ராஜா மொக்த்தார் பகுதியில் 46 வயது பாதுகாவலர் நிறுவனத்தை சேர்ந்த ஆடவர் ஒருவர் துப்பாக்கியினால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் வட கிள்ளான் மாவட்ட போலீசார் புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளர்.
பாதுகாவல் மேற்பார்வையாளரான சம்பந்தப்பட்ட ஆடவர், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.விஜய ராவ் கூறினார்.
சம்பவத்தின் போது அந்நபரின் வலது கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய. சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டின் போது அப்பேர்வழி பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது என்றும் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி எஸ்.விஜய ராவ் கூறினார்.
புலன் விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட ஐந்து ஆடவர்கள், விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்.விஜய ராவ் குறிப்பிட்டார்.