பினாங்கு, ஜார்ஜ் டவுன், ஜாலான் புர்மா– வில் உள்ள பேரங்காடி மையத்தின் மின்தூக்கி பராமரிப்பு பணியின் போது அந்த மின்தூக்கியின் கதவுகளுக்கு இடையே கழுத்து சிக்கி, உயிரிழந்த டெக்னிஷியன் பணியாளரான ஆர்.தினேஷ் குமார் மரணம் தொடர்பில் பினாங்கு வேலையிட சுகாதார, பாதுகாப்பு இலாகாவான டோஸ் விரிவாக புலன் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.
கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 28 வயதுடைய தினேஷ், சம்பவ இடத்திலேயே மாண்டார். உயிரிழப்புச் சம்பவத்தை தொடர்ந்து அந்த பேரங்காடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் தூக்கிகளின் அனைத்து வகையான பராமரிப்புப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக பினாங்கு டோஸ் இயக்குநர் ஹைரோலெ அஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 1994 ஆம் ஆண்டு வேலையிட சுகாதார பாதுகாப்பு தொடர்பான சட்ட விதி மீறல்கள் நடந்து இருக்குமானால் சம்பந்தப்பட்ட மின்தூக்கி பராமரிப்பு நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.