புதியதாக இயற்றப்படும் கொள்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர மக்கள் அணியக்கூடிய ஆடைகளை ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக இருக்கக்கூடாது என்று முன்னள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரஃபிதா அஜீஸ் கேட்டுக்கொண்டார்.
விதிமுறைகளும், அறிவுறுத்தல்களும் அகநிலை மதிப்பீடுகள் மற்றும் கருத்துகளை அடிப்படையாக கொண்டு இருக்குமானால் அதனால் கருத்துவேறுபாடுகளும் , எதிர்மறையான வாதங்களும் வளர்ப்பதாக மட்டுமே இருக்க முடியும் என்று ரபிடா அஸிஸ் குறிப்பிட்டார்.
மக்கள் அணியக்கூடிய ஆடைகளை கவனம் செலுத்துவதில் தங்களுக்கு தார்மீக கடப்பாடு உண்டு என்ற தோரணையில் அரசு துறைகள் செயல்படுமானால் அதனால் மக்கள் மத்தியில் விவாதங்கள் மட்டுமே தொடருமே தவிர சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு போதும் உதவாது என்று ரபிடா குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் கோலசிலாங்கூர் நகராண்மைக்கழக அலுவலகத்திற்கு ஒருவர், அரைக்கால் காற்சட்டையை அணிந்துள்ளார் என்பதற்காக அவரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர், அந்நபரை கால்கள் மறைக்கும் வண்ணம் கைலியை அணியும்படி உத்தரவிட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் ரபிடா மேற்கண்டவாறு கூறினார்.