காஜாங், ஏப்ரல் 19-காஜாங்
முன்னாள் பிரதமர் டத்தேஸ்ரீ நஜீப் துன் ரசாக், தமது எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்ப்டடுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
இவ்விவகாரத்தில் கருத்து சொல்லவோ, விவாதிக்கவோ தாம் விரும்பவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற நாட்டின் முன்னாள் பிரதமர் சுல்தான் அப்துல்லா, தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் சீராய்வு மனு ஒன்றை டத்தோஸ்ரீ நஜீப் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
நஜீப்பிற்கு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பிரதமர் அன்வாரிடம் கருத்து கேட்ட போது, இவ்விவகாரத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றார்.
இந்த விவகாரம் மன்னிப்பு வாரியத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். இது மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். இதனை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று காஜாங்கில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.