பயான் லெப்பாஸ், ஏப்ரல் 20-
தனது அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள மின்தூக்கியில் சுடுநீர் வீச்சு தாக்குதலுக்கு ஆளான மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர், உடலில் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் பினாங்கு, பயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி-யில் உள்ள அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் நிகழ்ந்தது.
பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் 33 வயதுடைய அந்த மற்றுத் திறனாளியின் உடல் நிலை, சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியின் மீது சுடு நீரை ஊற்றியவர் ஒரு பெண் என்று நம்பப்படுவதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளியின் 23 வயதுடைய தங்கை, இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்துள்ளார். இந்த தாக்குதல் எரிதிரவக வீச்சு என்று முதலில் கூறப்பட்ட போதிலும், சுடு நீர் வீச்சு என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 38 வயது பெண்ணை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண், அந்த அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் இரவு 9.12 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஜாஃப்ரி முஹம்மது ஜைன் தெரிவித்துள்ளார்.