கோலாலம்பூர், ஏப்ரல் 20-
பொது மன்னிப்பு வாரியத்தின் பரிந்துரையில் பேரில் குறைக்கப்பட்டுள்ள தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய 6 ஆண்டு காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு தொடர்பாக வழக்கு தொடுத்து இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கு மனுவிற்கு ஆதரவாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, அபிடேவிட் மனு ஒன்றை சமர்ப்பித்து இருப்பது, அம்னோ தலைவர் என்ற முறையில் அதனை செய்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
நஜீப்பின் 12 ஆண்டு சிறைத் தண்டனை காலத்தை 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவில் அரசாங்கம் தலையிடாது என்பதை பிரதமர் அன்வார் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் துணைப்பிரதமராக இருக்கும் அகமட் ஜாஹிட், முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக ஒரு சத்தியப்பிரமாண வாக்குமூலத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்றால், அவர் சார்ந்துள்ள அம்னோவின் தலைவர் என்ற முறையில் அதனை செய்துள்ளார்.
தம்மைப்பொறுத்தவரையில் நஜீப்பின் தண்டனையை குறைத்து இருக்கும் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் முடிவு இறுதியானது, தீர்க்காமானது. அந்த முடிவை எதிர்த்து சவால் விட முடியாது என்று பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தினார்.