கோலாலம்பூர், ஏப்ரல் 20-
நாட்டின் போலீஸ் படைக்கு நீண்ட காலம் தலைமையேற்றவரான முன்னாள் ஐஜிபி துன் ஹனிப் ஒமார் காலமானார். அவருக்கு வயது 85. இன்று அதிகாலை 2.15 மணியளவில் ஹனிப் ஒமார் தனது இறுதி மூச்சை விட்டதாக அவரின் மகன் அப்துல் ரஹ்மத் ஒமார் தெரிவித்தார்.
நாட்டின் போலீஸ் படையின் நான்காவது தலைவராக கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் தேதி தமது 35 வயதில் தலைமையேற்ற தன் ஹனிப் ஒமார், 20 ஆண்டு கால சேவைக்கு பின்னர் கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.
நாட்டின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக், மூன்றாவது பிரதமரான துன் ஹுசேன் ஓன் மற்றும் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆகிய மூன்று பிரதமர்களின் தலைமைத்துவத்தின் கீழ் துன் ஹனிப் ஒமார் நாட்டின் போலீஸ் படைக்கு தலைமையேற்று இருந்தார்.
அரச மலேசிய போலீஸ் படையின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்று இருந்த டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹாஷிம் கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரில் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவின் போலீஸ் படைக்கு துன் ஹனிப் ஒமார் தனது இளம் வயதில் தலைமையேற்றார். அதற்கு முன்னதாக ஹனிப் ஒமார், சிலாங்கூர், மலாக்கா ஆகிய மாநிலங்களின் போலீஸ் தலைவராக பொறுப்பேற்று இருந்தார்.
பேரா தெலுக் இந்தானில் பிறந்து வளர்ந்தவரான ஹனிப் ஒமார்,நாட்டின் போலீஸ் படைத் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டே ஆன நிலையில் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாட்டின் தலையாய சின்னங்களில் ஒன்றான கோலாலம்பூர் பூமலையில் வீற்றிருக்கும் தேசிய நினைவுத் சின்னமான துகு பெரிங்காத்தான், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தப்படுத்தப்பட்டது, ஹனிப் ஒமாருக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்திய சம்பவம் இன்னமும் மலேசியர்களால் நினைவுகூரப்படுகிறது.
நாட்டிற்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் மிரட்டலை ஏற்படுத்தி வந்த கம்யூனிஸ்டுவாதிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஹனிப் ஒமார், எந்த கம்யூனிஸ்டுவாதிகள் தொடர்ந்து மிரட்டலை ஏற்படுத்தி வந்தார்களோ அந்த கம்யூனிஸ்டுவாதிகள் தங்களின் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு நடைபெற்ற வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தமான தாய்லாந்து, ஹட்ஜாய் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது ஹனிப் ஒமார் காலத்தில்தான்.
1989 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி மலேசிய – தாய்லாந்து எல்லை நகரான ஹட்ஜாயில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி தலைவர்களான சி பெங், அப்துல்லா சிடி, ரஷித் மைதீன் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரலாற்றுப்பூர்வமான அந்த பேச்சுவார்த்தைக்கு ஹனிப் ஒமார் சார்பில் அப்போதையை போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஹின் முகமது நூர் தலைமையேற்றார்.
தமது பணி ஓய்வுக்கு பிறகு நாட்டின் முன்னணி சுற்றுலாத் தளமான கெந்திங் ஹைலண்ட்ஸ் பெர்ஹாட் குழுமத்தின் அலோசகராக ஹனிப் ஒமார் பணியாற்றி வந்தார்.