அரசாங்கத்தை கடுமையாக குறைகூறி வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிந்தனை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
எனினும் துன் மகாதீர் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டுமானால், அது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பு அரச மலேசியப் போலீஸ் படையின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சைபுடின் விளக்கினார்.
இப்போதைக்கு அந்த கடும் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தாம் கருதவில்லை என்றாலும் அதற்கான அவசியம் ஏற்படுமானால் அது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை போலீஸ் படையிடமே விட்டு விடுவதாக சைபுடின் மேலும் கூறினார்.
நடப்பு அரசாங்கம் குறித்து கருத்து சொல்வதற்கும், குறைகூறுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், பொது அமைதிக்கு குந்தகத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. அவர்களின் குறைகூறல்கள் வரம்பு மீறிவிடக்கூடாது என்று அமைச்சர் சைபுடின் வலியுறுத்தினார்.