ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 06-
பினாங்கு மாநில மக்கள் இம்மாதம் தொடங்கி வரும் ஜுன் மாதம் வரையில் அன்றாடம் பயன்படுத்தும் நீரின் அளவில் 10 விழுக்காட்டை குறைத்துக்கொள்ளும்படி பினாங்கு மாநில நீர் விநியோகிப்பு கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாண்டு முழுவதும் பினாங்கு மாநில மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் சராசரி பத்து விழுக்காடு நீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கே. பத்மநாபன் கேட்டுக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் பினாங்கில் நாள் ஒன்றுக்கு சராசரி 927 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுதத்தப்பட்டுள்ளது. ஆனால், இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 877 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு இருப்பதை பத்மநாபன் சுட்டிக்காட்டினார்.
பினாங்கு மாநிலத்தின் பிரதான நீர் அணைக்கட்டுகளான அயேர் ஹித்தாம் மற்றும் தெலுக் பாஹாங் ஆகியவற்றில் நீரின் கொள்ளளவு குறைந்து வரும் பட்சத்தில் மழை வந்தால் மட்டுமே அந்த நீர் பிடிப்பு மையங்களில் நீரின் மட்டம் உயரும் என்ற நிலை உள்ளதாக அவர் விளக்கினார்.
எனவே பினாங்கு மக்கள், அன்றாட நீர் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பத்மநாபன் கேட்டுக்கொண்டுள்ளார்.