பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-
கடந்தாண்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு அதற்கு துளியும் சாத்தியமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.
பொதுச்சேவை ஊழியர்கள் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறையைக் கோருவதைக் காட்டிலும் வேலை செய்வதற்கான உத்வேகத்தைக் கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் அக்கூற்றை Cuepacs எனப்படும் பொதுச்சேவை ஊழியர்களுக்கான தொழிற்சங்க காங்கிரஸ்சின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் வரவேற்றுள்ளார்.
இதற்கு முன்பு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு அதிகமான பொதுவிடுமுறை வழங்கப்பட்டுவிட்டதால், நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட வேண்டியதில்லை என்றாரவர்.
அப்படி கூடுதல் விடுமுறை வேண்டுமென்றால், வருடாந்திர விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பொதுச்சேவை ஊழியர்களுக்கு அப்துல் ரஹ்மான் மோஹட் நோர்டின் ஆலோசனை விடுத்தார்.