தகவல் இலாகாவினால் நேற்று தொடக்கி வைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நன்னெறிக் குறியீடு, பத்திரிகையாளர் மன்றத்தினால் வரையப்பட்ட நன்னெறிக் குறீயீட்டுக்கு மாறுப்பட்டதாகும் என்பதை தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
தகவல் இலாகா, கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து தனக்கென்று எப்போதுமே சொந்த நன்னெறிக்குறியீட்டை கொண்டு இருக்கிறது. இது புதிய ஆவணம் அல்ல என்று துணை அமைச்சர் தியோ நீ சிங் விளக்கினார்.
பத்திரிகையாளர் மன்றம் தனது உறுப்பின்ர்களுக்கான சொந்த குறியீட்டைக் கொண்டு இருக்கும். தகவல் இலாகா கொண்டுள்ள நன்னெறிக்குறியீடு, ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்களுக்கு உரியதாகும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறியீடானது, உண்மையில் MPI எனப்படும் மலேசிய பத்திரிகையாளர் கழகத்தினால் வெளியிடப்பட்டதாகும். அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் பத்திரிகையாளர் கழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் விருதளிப்புக்காக அந்த குறியீடு அறிமுகப்பட்டது என்பதையும் தியோ நீ சிங் தெளிவுபடுத்தினார்.
நேற்று புத்ராஜெயாவில் மலேசிய ஊடகவியலாளர்களுக்கான நன்னெறிக்குறியீட்டு முறையை தொடர்புதுறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.