வரும் ஜனவரி 25 ஆம் தேதி பத்துமலையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. இத் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளதாக தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு தேவஸ்தானம் அனுப்பியுள்ள அழைப்பிதழை பிரதமர் பெற்று இருப்பதாக கடந்த ஜனவரி 8 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், லட்சக்கணக்கான பேர் ஒன்றுகூடும் தைப்பூச விழாவன்று, தேவஸ்தானம் ஏற்பாட்டில் காலையில் நடைபெறவிருக்கும் சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக டான்ஸ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.