கோலாலம்பூர், ஏப்ரல் 19-
கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட ஓர் இஸ்ரேலிய பிரஜை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று அந்நிய நாட்டுப்பிரஜைகள் உட்பட பத்து பேர் , 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பிரஜை கைது செய்யப்பட்டது தொடர்பில் அந்த நபருடன் சேர்த்து மொத்தம் 18 பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களில் கோலசிலாங்கூரில் பிடிபட்ட ஒரு தம்பதியர், கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு விட்டனர். சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய பிரஜையான 38 வயதுடைய அவிட்டன் என்பவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மேலும் ஐவர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ரூடி முகமட் இசா தெரிவித்தார்.