ஜாலான் செரெம்பன், மே 17-
உலு பெண்டுல் அருகே உள்ள ஜாலான் செரெம்பன்- கோலா பிலா – வில் சாலையில் அடிப்பட்டு இறந்து கிடந்த பன்றிகள் மீது மோதி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 42 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா ADV 160 ரக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக கோலா பிலா மாவட்ட துணை போலீஸ் தலைவர் உதவி கண்காணிப்பாளர் நோராசுவான் சயிட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது அவ்வாடவர் செனவாங்-கிலிருந்து பாஹாவ்- விற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, முன்னதாக வாகனங்களால் மோதப்பட்டு சாலையில் இறந்து கிடந்த பன்றிகளை தவிர்க்க முற்பட்ட வேளை வேகக் கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளாகியதாக நோராசுவான் சயிட் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நோராசுவான் சயிட் மேலும் தகவலளித்தார்.