கோலாலம்பூர், ஏப்ரல் 01 –
பஹாங் சுல்தான், சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹ்மத் ஷாஹ்-வை கோபமடைய செய்திருந்த பக்காத்தான் ஹரப்பான் ஆதரவு இணையச் செய்தித்தளம் மீது விசாரணையை மேற்கொள்ள தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் உத்தரவிட்டார்.
அந்த செய்தித்தளத்தின் பெயரை அமைச்சரும் பஹாங் அரண்மனையும் வெளியிடவில்லை.
பள்ளிவாசல்களில் பழைய போக்குகள் கைவிடப்பட வேண்டுமென தாம் கூறிய கருத்தை சில ஊடகங்கள் தவறாக புரிந்துக்கொண்டிருப்பதாகவும் எந்த தரப்பையும் குறிப்பிடாமல் தாம் போதுவாக கூறிய கருத்தை கட்சி ஒன்றுக்கு கூறியது போல் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும் பஹாங் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து, PAS கட்சிக்கு பஹாங் சுல்தான் எச்சரிக்கை விடுத்ததாக இதற்கு முன்பு வெளியிட்டிருந்த செய்தியை மீட்டுக்கொண்ட ஹரப்பான் டேய்லி இணைய செய்தித்தளம், அதற்காக நேற்று மன்னிப்பைக் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட இணையச் செய்தி தளத்தின் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த அமைச்சர் பாஹ்மி, இனம், சமயம், மலாய் ஆட்சியாளர் குறித்த 3R விவகாரங்களை சாதாரணமாக கருத வேண்டாமென அனைத்து வித ஊடகங்களுக்கும் நினைவுறுத்தினார்.