கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பாதுகாவலர் ஒருவர் ஈப்போ அருகில் , கூனோங் லாங் என்ற இடத்தில் முகாமிடும் பகுதியில் இறந்து கிடந்தது இன்று புதன்கிழமை அதிகாலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
உள்ளூரைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் அதிகாலை 2.30 மணியளவில் இறந்து கிடப்பதைக் கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் தெரிவித்தார்.
உடலில் பலத்த காயங்களுடன் அந்த நபர் வேலியோரமாக கிடந்தார். அந்த நபர், கூர்மையான பொருளினால் தாக்கப்பட்டு, கடும் காயங்களால் உயிரிழந்ததாக சவப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்கு தொடர்புடையவர் என்று நம்பப்படும் சந்தேகப்பேர்வழி ஒருவர் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கம்போங் மஞ்சோய் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஏசிபி யாஹ்யா குறிப்பிட்டார்.