கெமாமான், பிப்ரவரி 22 –
ஆபாசப்படங்களை தயாரித்தது, சிறார்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் மருத்துவர் ஒருவர், திரெங்கானு, கெமாமான் செஸ்யென் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
தற்போது பகாங், குவந்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் 32 வயது டாக்டர் அனாஸ் ரம்லி என்ற அந்த மருத்துவர், நீதிபதி வான் சுஹைலா முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக ஆறு பாலியல் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
தாம் பணியாற்றிய மருத்தவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 7 க்கும் 11 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து சிறார்களை கைப்பேசியில் படம் எடுத்து, ஆபாசப்படங்களை தயாரித்துடன் 12 வயது சிறாரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மருத்துவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த இளம் மருத்துவர், இக்குற்றங்களை கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவு வார்ட்டில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் மறுத்து அந்த மருத்துவர் விசாரணை கோரியுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதி என்ற உத்தரவுடன் அந்த மருத்துவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.