வரும் ஜனவரி 25 ஆம் தேதி பினாங்கு தைபூசவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இரத ஊர்வலத்திற்கு வழிவிடும் வகையில் பினாங்கு, தண்ணீர்மலைக்கு செல்லும் சாலைகள் இரண்டு கட்டங்களாக மூடப்படுவதற்கு போக்குவரத்து போலீசார் திட்டம் கொண்டுள்ளதாக தண்ணீர் மலை, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் லெ. நரேஷ் குமார் தெரிவித்தார்.
தைப்பூச விழா முதல் நாளான ஜனவரி 24 ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கும், பின்னர் மதியம் 12 மணிக்கும் இரண்டு கட்டங்களாக சாலைகள் மூடப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நரேஷ்குமார் இதனை குறிப்பட்டார்.
இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் மற்றும் இதர ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்ற செய்தியார்கள் கூட்டத்தில் சாலைகள் மூடப்படும் விவரங்களையும் நரேஷ்குமார் விவரித்தார்.
வாகனங்களை நிறுத்துவதற்கு கோயில் அருகாமையில் உள்ள பள்ளிகள், இடங்களை ஒதுக்கி தருமாறு இந்து அறப்பணிவாரியம் கடிதம் எழுதியிருப்பதாகவும், ஆனால், அது எந்த அளவிற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று நரேஷ் குமார் குறிப்பிட்டார்.