முருகப்பெருமானின் உற்சவத் திருநாளான தைப்பூச விழா, வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் வேளையில் பினாங்கு தைப்பூச விழாவில் முதல் முறையாக வெள்ளி இரதமும், தங்க இரதமும் ஒன்றாக இணைந்து வருவதற்கு மிகச்சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் தெரிவித்துள்ள்ளார்.
முன்பு, ஒரு இரதம் தண்ணீர்மலை கோயிலை முன்கூட்டியே வந்து அடைந்த விடும். மற்றொரு இரதம் கால தாமதமாக வந்தடையும். இதனால் ஒரு இரதத்தை பார்த்து விட்டு இன்னொரு இரதத்தை பார்ப்பதற்கு பக்தபெருமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அசெகரியத்திற்கு ஆளாகினர். இந்த முறை இப்பிரச்னை முழுமையாக களையப்படும். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்துடன் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இரண்டு இரதங்களும் ஒன்றாக இணைந்து வருவதற்குரிய ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருவதாக ராயர் குறிப்பிட்டார்.
இன்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அலுவலகத்தில் அறவாரியப் பொறுப்பாளர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர் இதனை தெரிவித்தார்.
தைப்பூச விழா ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து மற்றொரு செய்தியாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்ற விவரத்தையும் ராயர் அறிவித்தார்.
இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன், அறப்பணி வாரியத்தின் கெளரவ செயலாளர் டாக்டர் விஷாந்தினி, தண்ணீர் மலை கோயில் தலைவர் நரேஷ், இதர பொறுப்பாளர்களான டினேஷ் வர்மன் குருக்கள், சண்முகநாதன், குமரன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.