பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஜிமுக்கான ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொள்வது என்பது துரோகமாகாது. மாறாக, கூட்டரசு அரசியல் சட்டப்படி அது ஜனநாயக உரிமை ஆகும் எனக் கூறினார் பெர்சத்து கட்சியின் சட்டப் பிரிவு துணைத் தலைவர் Sasha Lyna Abdul Latif.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுகிறார். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கலாம். தேவைப் பட்டால், அந்த ஆதரவை மீட்டும் கொள்ளலாம். அது ஜனநாயக உரிமை என ஷாஷா குறிப்பிட்டார்.
துபாய் நகர்வின் வழி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி தொடங்கி இருப்பதாக, சமூகத் தொடர்புத் துறையின் துணைத் தலைவர் Datuk Ismail Yusop கூறி இருப்பதைக் குறித்து ஷாஷா இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்மாயில் கூறியது உண்மையா அல்லது வெறும் வதந்தியா,என அறியப்படாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருப்பதாக ஷாஷா சொன்னார்.
முன்னதாக, அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டிருந்ததாகக் கூறும் ஷாஷா, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அதனை சாத்தியப்படுத்த முயன்றார். அப்படியானால், அன்வார் செய்ததும் துரோகமாகுமா என ஷாஷா கேள்வி எழுப்பினார்.