செரம்பான், ஏப்ரல் 01 –
மூன்று வயது பெண் குழந்தையை புறக்கணித்ததுடன் அக்குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்ததாக ஒரு பெண் உட்பட அவரின் காதலர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.
இன்று நீதிபதி டத்தின் சுரிட்டா புடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 42 வயதுடைய நொரைனி ஹரோன் மற்றும் அவரின் காதலரான 38 வயது மோஹட் கய்ரூல் சம்சுவா இஷ்ராக் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
அவ்விருவரும் வேண்டுமென்றே அக்குழந்தையை உயிரிழக்கும் அளவிற்கு புறக்கணித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் மாலை 6:45 மணி அளவில் போர்ட் டிக்சன், தாமான் மாயுங்-கில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவ்விருவர் மீதும் குற்றசாட்டப்பட்டுள்ளது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அந்நபர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.