இம்மாதம் இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாடு நடத்தப்படுவது கைவிடப்பட வேண்டும் என்று PKR கட்சியின் பாசீர் கூடாங் எம்.பி.யும், சட்ட வல்லுநருமான Hassan Abdul Karim கேட்டுக்கொண்டுள்ளார்.
பூமிபுத்ராக்களுக்காக பிரத்தியேகமாக பொருளாதார மாநாடு ஒன்றை நடத்துவதைக் காட்டிலும் அனைத்து இனத்து மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொருளாதார மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று Hassan Abdul Karim வலியுறுத்தினார்.
அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொருளாதார மாநாட்டை நடத்துவது மூலம் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய விஷயங்களில் அதீத கவனம் செலுத்தக்கூடிய மாநாடாக அது அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
ஓர் இனத்தைவிட வருமானம் பெறுகின்ற குழுக்களின் அடிப்படையில் வர்க்க ரீதியாக பொருளாதார பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு மாநாட்டை அராசங்கம் முன்னெடுக்க வேண்டிய காலம் கனிந்து விட்டதாக Hassan Abdul Karim வலியுறுத்தினார்.
அதிக வருமானம் பெறுகின்ற T10 தரப்பினர் மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற B60 தரப்பினர் என்ற நிலையில் வருமானம் பெறுகின்ற குழுக்கள், அனைத்து இனங்களை சேர்ந்த மலேசியர்களை உள்ளடக்கி இருப்பதால் , அவர்களுக்காக பொதுவான ஒரு மாநாடு நடத்தப்படுவது ஏற்புடையதாகவும், நியாயமாகவும் இருக்கும் என்று அந்த PKR எம்.பி. பரிந்துரை செய்துள்ளார்.
இது போன்ற மாநாடு உண்மையான நோக்கத்தையும், அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமானால், இந்த மாநாடு பூமிபுத்ராக்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் அல்லாதவர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொருளாதார உதவிகள் தேவைப்படக்கூடிய அனைவரையும் கவனிக்கக்கூடிய ஒரு சிறப்பு மாநாடாக அது அமைய வேண்டும் என்று Hassan Abdul Karim வலியுறுத்தினார்.
பூமிபுத்ராக்கள் பொருளாதார மாநாடு வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் மார்ச் 2 அம் தேதி வரை மூன்று தினங்களுக்கு கோலாலம்பூரில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.