கோலாலம்பூர், மார்ச் 8 –
நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாகவும், நிலைப்பாட்டுடனும் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமை மற்றும் அவர்கள் நலன் சார்ந்த ஒவ்வொரு அம்சமும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் அதேவேளையில் அவர்ளின் மேன்மைக்காக அவ்வப்போது பொருத்தமான கொள்கைகளை வரைவதிலும் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி தமது முகநூலில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாள் பெண் வர்க்கத்தினரின் மாண்புக்குரிய நன்நாளாகும். சமுதாயத்தின் மேன்மைக்கும், அவர்களை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது மட்டுமின்றி பாராட்டுக்குரியதாகும் என்று தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.