பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25-
பெரிக்காதான் நசியனால் கூட்டணிக்குள் பி. புனிதன் தலைமையிலான மலேசிய இந்திய மக்கள் கட்சி – MIPP சேர்த்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பெர்சத்து கட்சியிலுள்ள மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கான பிரிவில் கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அப்பிரிவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் FMT-யிடம் கூறுகையில், MIPP கட்சியைக் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்வது தொடர்பில், தங்களுடன் கலந்துப்பேசப்படாததால், தங்களது உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக அவர் கூறினார்.
கூட்டணியில் MIPP-யைச் சேர்த்துக்கொண்டது, இந்திய சமூகத்தின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதில், பெரிக்காதான் நசியனால் கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்டுவதாக, பி. புனிதன் கூறியிருந்ததை அவர் சாடினார்.
இந்திய தலைவர்களின் முகங்கள் தேவைப்படுவதால், பெரிக்காதான் நசியனால் கூட்டணி MIPP கட்சியைச் சேர்த்துக்கொண்டிருப்பதாக கூறப்படுவது அறிவுக்கு பொருந்தாத கூற்றாகும்.
இந்திய சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில், பெரிக்காதான் நசியனால் உறுதியாக இருந்தால், தங்களது பிரிவைப் பலப்படுத்துவதில் உரிய கவனத்தை செலுத்தியிருக்க வேண்டும். இந்தியர் சமூகத்தினருக்கு சரிசமமான வாய்ப்பும் உரிமையும் வழங்கப்படுவதை உறுதிபடுத்துவதிலும் அவர்களது சமூக பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் கவனத்தை வழங்கியிருக்க வேண்டும்.
நடப்பில், தங்களது பிரிவில் அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இணைந்து வருவதால், வரக்கூடிய காலங்களில், அவர்கள் அனைவரும் நிச்சயமாக பெர்சத்து கட்சிக்கான வாக்கு வங்கிகளாக இருப்பார்கள்.
அப்படியிருக்கையில், தற்போது, கூட்டணிக்குள் MIPP கட்சியை இணைத்துக்கொண்டுள்ளதால், அந்நடவடிக்கை, நேரடியாக தங்களது பிரிவுக்கே பாதிப்பை வழங்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.