கோத்தா பாரு, ஏப்ரல் 03-
பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிற்கு ஆதரவளிப்பதை தடுக்க, அக்கட்சி சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை தேசிய சங்கப் பதிவகத் துறை – ROS அங்கீகரித்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட அந்த புதிய சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக ROS கூறியிருந்தது.
இந்நிலையில், பெர்சாத்து-வின் சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்பட்டாலும், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற தமது பதவி பறிபோகாது என மோஹட் அஜிஸி அபு நைம் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடந்தாண்டே ஆதரவை வழங்கியிருந்த வேளையில் தமது பதவி பறிபோக வாய்ப்பில்லை என்பதுடன் அக்கட்சியிலிருந்து புதிதாக யாரும் பிரதமருக்கு ஆதரவளிக்க முடியாது என்றார் மோஹட் அஜிஸி.
BERSATU-விலிருந்து தாம் இன்னும் விலகாததைச் சுட்டிக்காட்டிய மோஹட் அஜிஸி அபு நைம், தம்முடன் சேர்ந்து பிரதமருக்கு ஆதரவளித்திருந்த சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மக்களவை தலைவரிடம் அது குறித்து பேசப்படும் என்றார்.