அலோர் காஜா, மார்ச் 11 –
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 220.4 ஆவது கிலோமீட்டரில் மலாக்கா, அலோர் காஜா அருகில் டிரெய்லர் லோரியின் பின்புறம் விரைவு பேருந்து மோதி, விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். 7 பயணிகள் கடும் காயத்திற்கு ஆளாகினர்.
இன்று அதிகா8ல 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான சுல்கார்னாயின் ஜாலில் 41 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.
இவ்விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய பயணிகளில் இருவர் சிரம்பான், துவங்கு ஜாபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் ஐவர், ரெம்பாவ் மருத்துவமனையிலா சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விபத்தில் உயிர் தப்பிய இதர பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோலாலம்பூருக்கு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அர்ஷாட் அபு தெரிவித்தார்.
அந்த விரைவு பேருந்து 30 பயணிகளுடன் ஜோகூர்பாருவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.