போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் கிரிமினல் என்று நம்பப்படும் சந்தேகப்பேர்வழி சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியயளவில் கெடா, ஜித்ரா அருகில் நபோ, ஜாலான் புக்கிட் கெச்சில் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
போலீசாரை நோக்கி சுடத் தொடங்கிய அந்த சந்தேகப் பேர்வழியிடமிருந்து போலீசார் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் அந்த சந்தேகப்பேர்வழி சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்துப் பட்டான் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார்.
முன்னதாக, கெடா மாநில குற்றப்புலனாய்வுத்துறையின் கடுங்குற்றத் தடுப்பு பிரிவான D9 போலீசார் சம்பந்தப்பட்ட சாலையில் Op Laras எனும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை போலீசார் நிறுத்த முயற்சி செய்தனர். எனினும் அந்த கார் நிற்காமல் வேகமாக செலுத்தப்பட்ட போது, கார்,சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்தது.
அதிலிருந்து வெளியேறிய நபர், போலீசாரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியினால் சுடமுற்பட்ட போது போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் 57 வயது மதிக்கத்தக்க நபர், குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மாண்டதாக டத்தோ பிசோல் சாலே குறிப்பிட்டார்.
சந்தேக நபரை சுட்டுவீழ்த்தியது மூலம் அந்நபர் பயன்படுத்திய காரிலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 9 மில்லிமீட்டர் அளவை கொண்ட 100 தோட்டாக்கள், புள்ளி 38 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மேலும் 100 தோட்டாக்கள்,M 16 ( எம். சிக்ஸ்டீன் ) போன்ற Raifal துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 5.56 ரக தோட்டாக்ள் ஆகியவற்றை போலீசார் மீட்டதாக நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார்.
உள்ளூரை சேர்ந்த அந்த நபர், போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருந்தல் போன்ற நான்கு குற்றப்பதிவுகளை கொண்டிருந்ததாக அவர் மேலும் கூறினார்.