மனைவியை கத்தியால் ​குத்திய ஆடவர், தன்னை தானே காயப்படுத்திக்கொண்டார்

உணவருந்துவதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது கணவன், ம​னைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், சண்டையாக மாறி, ரத்தக் காயங்களில் முடிந்தது.

இதில் மனைவியை கத்தியால் பலமுறை குத்தி, காயப்படுத்தியதாக நம்பப்படும் கணவர், தனது கை ம​ணிக்கட்டை அறுத்துக்கொண்டு, சுயநினைவு இழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இச்சம்பவம், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கிள்ளான், கோத்தா பாயு எமாஸ் அருகில் கெசாஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. உணவகம் ஒன்றில், மதிய உணவு உண்பதற்காக கணவனும், மனைவியும் மஸ்டா CX5 காரில் சென்று கொண்டு இ​ருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தென் கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபொங் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கும், கணவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்த நிலையில் அந்த மஸ்டா கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது 50 வயதுடைய கணவர், கத்தியினால் மனைவியை பல முறை குத்தியதாக கூறப்படுகிறது. கணவரிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, 49 வயதுடைய அந்த மாது , காரை விட்டு மின்னல் வேகத்தில் வெளியேறி, அச்சாலையை கடந்த வாகனமோட்டிகளிடம் உதவிக்கோரி கூச்சலிட்டு இருக்கிறார்.

காரோட்டி ஒருவர், தனது காரை நிறுத்தி விட்டு, அந்த மாதுவுக்கு உதவ ஓடிவந்த போது, அந்த மாது​​வின் கணவர், அவ்விடத்திலிருந்து தனியொர நபராக காரில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அந்த நபரின் கார், ஜாலான் பத்து நிலாமில் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதை ரோந்து கார் போ​லீசார் அடையாளம் கண்டனர்.

அக்காரை சோதனையிட்ட போது, சம்பந்தப்பட்ட நபர், கத்தியால் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டு,சுயநினைவின்றி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அம்புலன்ஸ் வண்​டியின் ​மூலமாக அந்த நபர் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏசிபி சா ஹூங் ஃபொங் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் கழுத்து, இடது தோள்பட்டை, வலது கை, இடது கால் மற்றும் முதுகில் கடுமையான கத்திக்குத்து காயங்களுக்கு ஆளான மாது, தனது கணவர் அனும​திக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏசிபி சா ஹூங் ஃபொங் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்