சிலாங்கூர், மே 17-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர், செரி கெம்பாங்கன் –னில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து, அந்த மருத்துவரை போலீசார், சட்டவிரோதமாக கைது செய்தது தொடர்பில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
டாக்டர் ரஞ்சீத் சிங் என்ற அந்த தனியார் மருத்துவரை போலீசார் கைது செய்து இருப்பது மூலம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று நீதிபதி சுல்கர்னைன் ஹாசன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இழப்பீட்டுத் தொகையுடன் வழக்கு செலவுத் தொகையாக அந்த மருத்துவருக்கு 13 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரின் வீட்டின் கதவை தட்டி, எந்தவொரு காரணமும் சொல்லாமல் அவரை பலவந்தமாக கைது செய்து இருப்பது மூலம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்பது இவ்வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி சுல்கர்னைன் ஹாசன் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.