கோலாலம்பூர், மே 17 –
தனது மைத்துனியை கொலை செய்த குற்றத்திற்காக 33 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மருந்து சாதனங்களை விநியோகிக்கும் முன்னாள் பணியாளர் ஒருவரை கூட்டரசு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
73 வயது ஏ. ஆரோக்கியசாமி என்ற அந்த முதியவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். தனது சிறைத் தண்டனை காலத்தை பெரும்பகுதியை நிறைவு செய்து விட்டதால் அவரை விடுதலை செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
ஆரோக்கியசாமியின் சிறைத் தண்டனை காலம் அவர் பிடிபட்ட நாளான 2000 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜோகூர், தம்போயை சேர்ந்த ஆரோக்கியசாமி கடந்த 2000 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் தேதி இரவு 11 மணியளவில் தொழிற்பேட்டை பகுதியில் தனது மைத்துனி, எஸ். ஞானத்தை கழுத்து அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.