ஹுலு லங்காட், ஏப்ரல் 22-
ஹுலு லங்காட், குனுங் நுவாங், லோலோ முகாமின் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போனதாக கூறப்படும் மலையேறி ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் 36 வயதுடைய அவ்வாடவர் விழுந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
நேற்று இரவு 8.11 மணியளவில் ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து காணாமல் போனதாக தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு கிடைக்க பெற்ற புகாரை அடுத்து அந்நபரை தேடும் பணி தொடங்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.
போமோ அலி நீர்வீழ்ச்சியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.