கோலாலம்பூர், ஏப்ரல் 22-
ஹுலு சிலாங்கூர் உட்பட கோம்பாக் மாவட்டங்களை சுற்றியுள்ள 24 மணி நேர கடைகளினுள் புகுந்து கொள்ளையடித்து வந்த அயோய் என்கிற கொள்ளை கும்பலை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.
நேற்று நள்ளிரவு 3 மணியளவில் குவாங்கில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 23 முதல் 32 வயதிற்கு உட்பட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட வேளை, அந்நபர்களிடமிருந்து ஹோண்டா RSX மோட்டார் சைக்கிள், இரண்டு தலைக்கவசம்-கள், ஒரு கருப்பு ஆடை மற்றும் ஒரு ஜோடி காலணியும் கைப்பற்றப்பட்டதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ட் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அஹ்மத் பைசல் விளக்கமளித்தார். அத்துடன், சிறுநீர் பரிசோதனையில் அந்நபர்கள் methamphetamine மற்றும் tetrahydrocannabinol ஆகிய போதைப்பொருள்களை உட்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேகிக்கும் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்பது கொள்ளை வழக்குகளை போலீசார் முறியடித்திருப்பதாக தெரியப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நேற்று தொடங்கி வருகின்ற வெள்ளிக்கிழமை வரையில் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அஹ்மத் பைசல் கூறினார்.