ஜோகூர், பாரு, ஏப்ரல் 7 –
நோன்பு பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த 1,000 மாணவர்களை விடுமுறையில் வீட்டிற்கு செல்வதற்கு ஜோகூர் அரசாங்கம் இலவசமாக 23 பேருந்துகளை வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து நேற்று வரையில் ஜோம் பாலீக் ராயா என்ற திட்டத்தின் மூலம் மாநில அரசாங்கம் 100,000 வெள்ளி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து சேவையை வழங்கியிருப்பதாக மாநில கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் அஸ்னான் தாமின் கூறினார்.
குடும்பத்தை விட்டு தொலைத்தூரத்தில் பல்கலைக்கழகம் பயிலும் மாணவர்களை இப்பெருநாள் நாட்களில் பாதுகாப்பாகவும் போதுமான வசதிகளுடனும் அவர்களின் வீட்டிற்கு திரும்புவதற்கு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அஸ்னான் தாமின் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.
இதில் யூனீவெர்சித்தி மலேசியா பெர்லிஸ்,யூனிவெர்சித்தி கெபாங்சான் மலேசியா, யூனிவெர்சித்தி மலேசியா கிளந்தான், யூனிவெர்சித்தி சுல்தான் சைனால் அபிடின் உட்பட யூனிவெர்சித்தி மலேசியா திரங்கானு ஆகிய பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.