ஜோகூர், மே 15-
ஜோகூர், கூலாய்-யில் மாது ஒருவரை மடக்கி, கொள்ளையிட்டதுடன், அவரை கடத்த முயற்சி செய்ததாக நம்பப்படும் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை ஜோகூர்பாரு மற்றும் கெடா கூலிமில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் அந்த நான்கு நபர்கள் பிடிபட்டனர் என்று கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.
இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரத்திலேயே ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் கடுங்குற்றத் தடுப்பு பிரிவான D9 போலீசார், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொண்ட துரித தேடுதல் வேட்டையில் அந்த நான்கு நபர்கள் பதுங்கியிருந்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தான் செங் லீ குறிப்பிட்டார்.
பிடிபட்டுள்ள 21 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு நபர்களுக்கும் ஏற்கனவே போலீஸ் குற்றப்பதிவு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பிடிபட்டது மூலம் ஒரு ஹோண்டா சிவிக் கார், நான்கு கைப்பேசிகள் உட்பட சில தொடர்பு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த மே 5 ஆம் தேதி கூலாய், தாமான் லெஜண்டா புத்ரா என்ற இடத்தில் உள்ள மாதுவின் வீட்டிலிருந்து அவரை கடத்துவதற்கு அந்த நான்கு நபர்கள் முயற்சி செய்ததாக தான் செங் லீ தெரிவித்தார்.