அம்பாங், மார்ச் 2 –
பேரங்காடி மையத்தில் தன்னுடன் வேலை செய்து வரும் மாதுவை, மானபங்கம் செய்ததாக கூறப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் 32 வயது மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த அந்நிய ஆடவர் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
வேலை முடிந்தப் பின்னர் அந்த பேரங்காடி மையத்தின் கிடங்கில் அந்த மாதுவின் எடையை நிறுத்துப் பார்ப்பதாக கூறி, அவரை பின்புறமாக கட்டியணைத்து, அல்லாக்காக தூக்கி, முத்தமிட்டதாக அந்த மாது தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஏ.சி.பி மொகமட் அசாம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
அன்றைய தினமே கைது செய்யப்பட்ட 27 வயதுடைய அந்த அந்நிய நாட்டவர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.