மாஸ்கோ, மார்ச் 23.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் க்ராஸ்னகோர்ஸ்க் நகரில் உள்ள க்ரொக்கஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு, 6 ஆயிரம் பேர் அமர்ந்திருந்த இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி குண்டுகள் சீறிப் பாயும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் உயிருக்கு பயந்து தப்பித்து ஓட பலர் முயற்சி செய்தனர். சிலர் இருக்கைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டனர்.
இதில் குண்டடி பட்டு 60 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்தில் முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதமானது. தாக்குதல் நடத்தியவர்கள் யார்? தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸ், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.